1/8/14

1,200 புதிய பஸ்கள்

சென்னையில்
 மேலும் 100 சிறிய பஸ்கள் விடப்படும்: ரூ.254 கோடியில் 1,200 புதிய பஸ்கள்
சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை மாநகரில் மேலும் 100 புதிய சிறிய பஸ்கள் இயக்கப்படும் என்றும்,
ரூ.254 கோடியில் 1,200 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்றும் சட்டசபையில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

1,200 புதிய பஸ்கள்

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நாளொன்றுக்கு 91.20 லட்சம் கிலோ
மீட்டர் தூரத்திற்கு பேருந்துகளை இயக்கி அதன் மூலம் இரண்டு கோடியே பத்து
லட்சம் பயணிகள் குறைந்த செலவில் நிறைவான பயணம் செய்திடும் வகையில்,
அரசுப்போக்குவரத்துக் கழகங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களால் போக்குவரத்துக் கழகங்களின் சேவை
மகத்தானதாக போற்றப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 1,476 புதிய வழித் தடங்கள் துவக்கி
வைக்கப்பட்டதோடு, 4,649 புதிய பேருந்துகள், 712 புனரமைக்கப்பட்ட
பேருந்துகள் மற்றும் 107 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்துத்துறை
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங் களின் பேருந்துகளை
நவீனப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய
பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க எனது தலைமையிலான அரசு
முடிவு செய்துள்ளது.

இதற்காக 2014-2015-ம் ஆண்டில், 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200
புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசு பஸ்கள் ஜப்தி

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றபின், மோட்டார் வாகன விபத்துகள்
இழப்பீடு வழங்காமையால், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை
மீட்பதற்காக 38 கோடியே 91 லட்சம் ரூபாயினை அரசுப்போக்குவரத்துக்
கழகங்களுக்கு எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. 23-7-2014 அன்று
போக்குவரத்துத் துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து
கொண்டு பேசிய உறுப்பினர்கள் அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள்
நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

இது குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் விவாதித்ததில், விபத்துக்கான
இழப்பீட்டுத் தொகையான 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப்போக்குவரத்துக்
கழகங்கள் செலுத்தாததால் 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜப்தி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை மீட்கும் வகையில், 39
கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை
முன்பணமாக எனது தலைமையிலான அரசு வழங்கும்.

சென்னைக்கு 100 புதிய சிறிய பஸ்கள்

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து
இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரெயில் நிலையம்
 மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள்
வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு
சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டும்,
பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய
சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை
மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும்.

மாவட்ட தலைநகரங்களுக்கு இணையாக சில மாவட்டங்களின் இதர பகுதிகளில் மக்கள்
தொகை, தொழில் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன.
இந்தப்பகுதிகளில் உள்ள மக்கள், ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், புதிய
வாகனம் பதிவு செய்தல் போன்ற பணிகளுக்காக வட்டாரப்போக்குவரத்து
அலுவலகங்களுக்கு செல்ல 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை பயணம்
செய்ய வேண்டி உள்ளது.

இதனை களையும் வகையில், 2 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில், மண்மங்கலம்,
உசிலம்பட்டி, திருத்தணி மற்றும் செய்யார் ஆகிய பகுதிகளில் புதிய பகுதி
அலுவலகங்கள் உருவாக்கப்படும் என்பதையும், சிதம்பரம் மற்றும் திருச்செந்தூர்
 ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்கள், 1 கோடியே 55 லட்சம் ரூபாய்
செலவில் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களாக தரம் உயர்த்தப்படும் என்பதையும்
 மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் நெரிசலின்றி,
குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையவும்,
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெகு விரைவில் சென்று வரவும்
வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
=====================================================================

கருத்துகள் இல்லை: